தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 05, 2016

மனம் பிளந்து பேசுகிறேன்...


வணக்கம் நட்பூக்களே...
இம்முறை இந்தியா வந்து வலைப்பதிவர்களை சந்திக்க முடியாத சூழலில் வீழ்ந்து கிடந்தேன் மன அமைதி இல்லை காரணம் வழக்கத்தைவிட எனது குடும்பமும், சுற்றமும் எனக்கு சந்தோஷத்தை சற்று ''அழுத்தமாக'' கொடுத்து விட்டது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ கொடுத்து விட்டேன் எனது அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை இனியெனும் எனது செல்வங்களுடன் இணைந்து வாழ வேண்டி....

ஒரு மனிதன் மனைவியை இழந்து வாழ்வதே அவன் செய்த பாவமோ... என்னவோ... இறைவன் அவனுக்கு கொடுத்த தண்டனைதான் அதிலும் அதையே காரணமாக சொல்லிக் காண்பித்து அவனை மேலும் வேதனைப்படுத்தும் மனிதர்களை என்ன சொல்வது ? எத்தனை மனிதர்கள் என்னிடம் சர்வ சாதாரணமாக கேட்டு இருக்கின்றார்கள் தெரியுமா ? 
உனக்கென்ன மனைவி இல்லை என்ன செலவு இருக்கப்போகுது... ?
மனைவியவள் இருந்திருந்தால் நிச்சயமாக சோற்றுச் செலவுதான் செய்திருப்பேன் அவள் இல்லாத காரணத்தால் எனக்கு எவ்வளவு சுற்றுச்செலவு என்பது இந்த சமூக மனிதர்களுக்கு தெரியவில்லை.
என்னை புனிதனாக நினைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை சராசரி மனிதனாக நினைத்தால் போதுமே... ஆனால் சுற்றம் என்னை உணர்வுகள் அற்ற நடமாடும் இயந்திரமாக நினைக்கின்றதே....

//இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்//
- கவியரசர் கண்ணதாசன்

நான் இதற்காக மட்டும் சொல்லவில்லை இதைக்கடந்து பல விடயங்கள் இருக்கின்றது என்று சொல்ல வருகின்றேன்.

நாம் பழைய காலங்களில் தினம் தோறும் ஒலிபெருக்கியில் கேட்டு இருந்திருப்போம் திருவிளையாடல் திரைப்படத்தின் வசனத்தை...

//சக்தி இல்லையேல் சிவம் இல்லை
சிவம் இல்லையேல் சக்தி இல்லை
ஆணுக்குப் பெண் அடிமை
அந்த ஆணையும் பெற்றுத்தருவது பெண்மை//

அப்பொழுதெல்லாம் நான் இந்த வார்த்தைகளை நல்ல எதுகை மோனையோடு எழுதி இருக்கின்றார்கள் என்றுதான் நினைத்து இருக்கின்றேன் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தையோ... அர்த்தத்தின் ஆழத்தையோ... ஆழத்தில் ஊருறுவி நீள அகலத்தையோ... சிந்தித்துப் பார்த்ததில்லை. இன்று எனது வாழ்க்கைச் சூழலில் சிக்கிப்பார்க்கும் பொழுது எனது கூற்றுப்படி சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே உண்மை என்று படுகின்றது நட்பூக்களே... இது பொதுவானது அல்ல ! எனது தனிப்பட்ட, எனக்குள் உட்பட்ட விடயம் ஆகவே இதை யாரும் தவறானது என்று வாதிட வேண்டாம் சக்தி பிரியும் பொழுது சிவன் சக்தியை (பலத்தை) இழந்து விடுகின்றான் ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனையில் மனைவி என்றவள் இல்லையெனில் இச்சமூகம் குடும்பமாக அங்கீகரிக்க மறுக்கின்றது குடிக்க கஞ்சி இல்லாவிட்டாலும் அங்கு ஒரு பெண் இருந்தால் அந்த குடும்பத்தை வழி நடத்தி சமூகத்திற்கு அடையாளம் காட்டிச் செல்கின்றாள்.

//பெண்புத்தி பின்புத்தி// என்ற சொல்லை பலரும் தவறாக அர்த்தம் கொண்டுள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன் பெண்ணின் புத்தி ஆணுக்குப் பின்னால் இருந்து கொண்டு அவனது தவறுகளை குத்தி (சுட்டிக்காட்டி) நல்வழி படுத்துபவள் ஆகவே அதை பின்புத்தி என்று சொல்லி வைத்தார்கள் என்பது எமது கணிப்பு என்னவள் இன்று இருந்திருந்தால் எனது உழைப்பில் பகுதிக்கு மேல் நான் இழந்திருக்க மாட்டேனே... இன்றளவும்கூட இந்த இழப்பை நான் ஏமாந்ததாக உணரவில்லை நமது குடும்பத்துக்காகத்தானே.... என்றே நினைக்கிறேன் நான் பல நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு இவ்உலக மக்கள் அனைவரும் நல்ல எண்ணங்களோடு, மனித நேயத்தோடு வாழவேண்டும் என்று. எனது குடும்பத்து, சுற்றத்து மனிதர்களையே என்னால் நல்வழி படுத்தமுடியாதபோது..........? எனது சமூகசிந்தனை அறிவீணமே என்றே தோன்றுகின்றது நட்பூக்களே... துணையை தொடர்ந்து நேசியுங்கள் அந்த நேசிப்பு உங்கள் மனதை வலுப்படுத்தும், வாழ்வாதாரத்தை உயர்த்தும், வாழ்க்கையை வளப்படுத்தும், நாளும் நலமுடன் வாழ வழி வகுக்கும்.

இந்த சுழலிலும் ஒரு வேலை காரணமாக நமது வலைப்பதிவர் திரு. வலிப்போக்கன் அவர்களை நான் சிலமுறை சந்திக்க வேண்டி வந்தது அவர் எனது முகத்தின் ரேகையை படித்தாரோ... என்னவோ... சில விடயங்களை அவராகவே கிண்டிக் கிழங்கெடுத்து கீவா நல்லி வேறெடுத்து ஆறுதலாக பேசி மனவலிகளை போக்கினார். நான் நெடுங்காலமாக நினைத்திருந்த ஒரு கனவை நனவாக்கி வெற்றிகரமாக முடித்து விட்டேன் அதாவது பாதி கிணறு தாண்டி அந்தரத்தில் நிற்கிறேன் மீதியைக் கடப்பதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் தேவை அதை அடுத்த பதிவில பேசுகிறேன்.

52 கருத்துகள்:

  1. நானும் உங்களை சந்தித்த போது ,ராஜினாமா செய்யப் போவதை சொன்னீர்கள் .யாரும் தொட முடியாத உச்சத்தை ,அதுவும் வெளிநாட்டு ஒன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள் !
    அதை ராஜினாமா செய்வது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது .அது ஒன்றுதான் உங்கள் கவலைகளைப் போக்கும் என்று வேறு வழியில்லையே?
    என் ஆதரவு ,உங்களின் துன்பத்தில் துளியளவேனும் போக்கும் என்றால் நிச்சயம் உண்டு !

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் நன்மைக்கே என நினையுங்கள், மனதில் நெகடிவ் திங்கிங்க் அண்டாமல் பாசிடிவ் சிந்தனையில் எது சரியென படுகின்றதோ அதை செய்யுங்கள். எந்த முடிவு எடுப்பதானலும் யாரையுமே சார்ந்திருக்காமல் நம்பிச்செல்லாமல் உங்கள் வயது மற்றும் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டே முடிவெடுங்கள் சார். நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மிடம் இருக்கும் வரை தான் இனிப்பை மொய்ய்க்கும் எறும்புகள் போலிருப்பார்கள்.இலலானை இல்லாளும் மதியாள் என்பது உங்களுக்கே புரியும்,

    சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்பது போல் சக்தி இல்லையே சிவனும் இல்லை என்பதும் நிஜமே, பெண் புத்தி பின் புத்திக்கும் நல்ல புரிதலுடனான விளக்கம். பின் வருவதை முன் கூட்டியே சிந்திக்கும் ஞானக்கண் பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரம்,ஆனால் அதை புரிந்து பயன் படுத்துபவர்கள் அரிதிலும் அரிதே!

    மனைவியோ,கணவனோ பிரிவுகள் வாலிபத்தில் கஷ்டமாய் தெரிவதில்லை, வயதாகும் போது உடலாலும் உள்ளத்தலௌம் நம்மை புரிந்து தாங்கிட தேவை உணர்ந்து செயல் பட நமக்கு யாருமே இல்லை எனும் வெறுமை உணர்வை தரும் என்பதனால் உங்கள் உணர்வுகள் புரிகின்றது சார். கவலைப்படாமல் மனதினை சந்தோஷமாய் வைத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நான் எப்பொழுதே எனது மனசாட்சியோடு விவாதித்தே தீர்மானத்திற்கு வருபவன் இருப்பினும் தங்களது விரிவான ஆலோசனைக்கு நன்றி

      நீக்கு
  3. தம்பி!
    தொழில் இருந்தால் பணம் வரும்
    பணம் இருந்தால் வாழ்வு அமையும்
    வாழ்வு அமைந்தால்
    பிள்ளைச் செல்வங்கள் கிடைக்கும்...
    பிள்ளைச் செல்வங்கள் கிடைத்தால்
    பிள்ளைச் செல்வங்களைப் பேண வேண்டும்...
    பிள்ளைச் செல்வங்களுக்காக
    ஊரோடு தொழில் அமைத்து
    பிள்ளைச் செல்வங்களைப் பேரறிஞர்களாக
    உருவாக்க வேண்டிய பொறுப்பு இருக்கணும்
    இதைத்தானே
    உறவுகள், ஊரார் உரைத்திருப்பாங்க...
    அதில் தப்பில்லையே!
    தங்கள் எதிர்காலம் வெற்றிகளைத் தரும்
    நாங்க ஒத்துழைப்போமென - உதவ
    முன்நிற்கும் நட்புகள் - தங்களுக்கு
    நிறையவே இருக்கையில் அச்சமேன்!
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. வேலையை விடுவது தவிர வேறு வழி இல்லையா? வேறு வேலை தேடிக் கொண்டபின் இப்போதைய வேலையை விடுவது உசிதம். எது எப்படி ஆயினும் உங்கள் மனக்கவலைகள், வருத்தங்கள் நீங்கி சீக்கிரமே மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைய எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே எனக்கு வேலையல்ல பிரச்சினை.
      எனது செல்வங்களை பிரிந்து இருந்ததே பிரச்சினை,
      பிரிந்து இருப்பதே பிரச்சினை.

      ஒன்றை இழந்தால்தான் இவ்வுலகில் ஒன்றைப்பெற முடியும் என்பது நியதி ஆகவே நான் வருமானத்தை இழக்க துணிந்து விட்டேன் மேலும் இந்த வருமானமும் எனக்கு பிரச்சினை மட்டுமல்ல, பிரயோசனமும் இல்லாததும்கூட வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. வாழ்க்கைத்துணையைப்பற்றி நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை. இப்போதும் நீங்கள் இவ்வளவு நண்பர்களையும், நலம் நாடுவோர்களையும் பெற்றுள்ளீர்கள் என்றால், உங்கள் மனைவிதான் உங்களுடனிருந்து இயங்குகின்றார்கள் என திடமாக நம்பலாம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது நிறைவான மனஆறுதலுக்கு நன்றி.

      நீக்கு
  6. வலை உலக நண்பர்களின் ஆதரவு தங்களுக்கு என்றும் உண்டு நண்பரே.
    வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்,உறவுகள் கசப்பை வாரி வழங்கத்தான் செய்யும்
    வாழ்ந்து காட்டுங்கள், நண்பரே
    வாழ்ந்து காட்டுங்கள்
    நிதானமாய் முடிவெடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே சொந்தங்கள் கசப்பை மட்டுமே வாரி வழங்குவார்கள் இவர்களுக்கு மத்தியில் நிச்சயமாக வாழ்ந்து காட்டவேண்டும் வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  7. மனைவியைப் பற்றி நீங்கள் "சொல்லுவதெல்லாம் உண்மை". கல்ஃபில் வேலை பார்க்கும், கடும்பத்தை இந்தியாவில் விட்டுப் பிரிந்திருக்கும் அனைவருக்கும் வருட விடுமுறைக்குச் சென்று திரும்பியபின் தோன்றும் எண்ணம்தான் உங்களுக்கும் தோன்றியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பணம் ஓரளவு பிரதானம். பசங்க நல்லாப் படிக்கவும் தேவைனா விடுதியில் சேர்க்கவும் பணமே முக்கியம். சிந்தித்துச் தீர்மானித்துவிட்டீர்களென்றால் தயங்காமல் முன்னேறுங்கள். கடினமாக உழைக்கத் தயாராகிவிட்டால் செல்வமும் அமைதியும் வருவதற்கு என்ன தடை.

    எப்போதும், "நமக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுவோம்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே நான் சிறுவயது முதலே எப்பொழுதுமே இந்தப் பாடலைத்தான் நினைவில் கொள்வேன்.

      விரிவான கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. தங்களை நேரில் சந்தித்தபோது கூட இதை பற்றி கூறினீர்கள். உள்ளூரில் அரசு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பு. நீங்கள் வெளிநாட்டில் அரசாங்க பணியில் இருக்கிறீர்கள். நல்ல வேலை.! அதை விட வேண்டுமா..? என்று தோன்றியது. ஆனால், வெளியில் இருந்தது ஆயிரம் வார்த்தைகளை சொல்லலாம். ஆனால், அவரர்களின் வலி அவரவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் மிகுந்த போராட்டத்திற்கு பிறகே இந்த முடிவை எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். போனது போகட்டும்..! இனி வருங்காலம் மேலும் சிறப்பாக தாயகத்தில் மலர எனது வாழ்த்துக்கள்!
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மின்னுவது போலவே தெரிகின்றது.

      மன போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டேன்

      நீக்கு
  9. தொலைபேசியில் உங்களிடம் பேசியதையே பகிரவிரும்புகிறேன். எந்த விஷயத்திலும் தெளிவாக, உறுதியோடு இருங்கள். உங்கள் வழிப்படி செல்லுங்கள். மன உறுதி, நம்பிக்கை வாழ்வில் நம்மை நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும். நமக்காக வாழ்வோம். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்ற பாடல் நினைவிற்கு வருகிறதா? இறையருளால் அனைத்தும் நன்கு அமையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் ஆறுதலான வார்த்தைகள் மனதுக்கு இதம் அளித்தது, அளிக்கின்றது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. பெண் புத்தி பின் புத்தி என்பதன் விளக்கம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. ஐயா! எப்பொழுதும் கலகலப்பான பதிவுகளை இடும் நீங்கள் உங்கள் மனதுக்குள் எவ்வளவு கனத்த வலியைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

    மனைவியை இழந்தவரைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையைச் சொல்வது அவருக்கு எப்பேர்ப்பட்ட வேதனையை உண்டாக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. இதற்கு அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நம் சமூகத்தில் இன்று வரை வளர்ந்துள்ள நாகரிகம் அவ்வளவுதான். விட்டுத் தள்ளுங்கள்!

    நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது எவ்வளவு அன்பு கொண்டவர் என்பதை நண்பர்கள் நாங்கள் அறிவோம். அந்த அன்புக் குழந்தைகளுடன் இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாகச் செலவிட இந்தப் பணி விலகல் உங்களுக்கு உதவட்டும்! அதே நேரம், மேற்படி, உள்ளத்தைப் புண்படுத்தும் மனிதர்களுடனான நேரத்தைக் குறைத்துக் கொண்டு நல்ல நூல்கள் படித்தல், இதழ்கள் படித்தல், சுவையான திரைப்படங்கள் பார்த்தல், சமூகப் பணி புரிதல், வலைப்பூ எழுதுவது போன்ற இணையப் பணிகளை மேற்கொள்ளுதல் என நேரத்தைச் செலவிட்டால் உங்கள் மனதுக்கு இதமளிப்பதோடு மற்றவர்களுக்கும் - குறிப்பாக நண்பர்களான எங்களுக்கும் - பயனுள்ளதாய் அமையும்.

    இவ்வளவு மனம் கசந்த சூழலிலும், இந்தியாவுக்கு வந்திருந்தபொழுது தவறாமல் என்னைப் பேசியில் அழைத்து நீங்கள் உரையாடியதை எண்ணி நெகிழ்கிறேன்! உளமார்ந்த நன்றி!

    மனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே மிகப் பிரமாண்டமான கருத்துரை மூலம் மனதை இலவம் பஞ்சுபோல் பறக்க வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
    2. என் கருத்து உண்மையிலேயே உங்கள் மனதுக்குஅப்படி ஆறுதல் அளித்திருக்குமானால் அதை விட வேறென்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்? நன்றி நண்பரே!

      நீக்கு
    3. மீள் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  12. மனம் திறந்து பேசுவதற்கும் மனம் பிளந்து பேசுவதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கிறது இதுவும் கடந்து போகும் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வித்தியாசங்களை நானும் அறிவேன்.
      மென்மையான பூங்காற்றுக்கும்
      சூறாவளி காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டுதான்.

      நீக்கு
  13. நண்பர்க்கு என் ஆதரவு என்னென்றும் உண்டு..நண்பர் மன அமைதி பெற நண்பர்கள் உதவிட வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் ஆதரவுக்கு நன்றி

      நீக்கு
  14. உங்கள் குடும்பத்தாரோடு கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்திருப்பீர்கள். சிறப்பான எதிர் காலம் நிச்சயமாக அமையும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தீர்மானித்தே முடிவெடுத்தேன் என்பது உண்மையே வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. வணக்கம்.

    என்றுமே தங்கள் பேச்சின் ரசிகருள் ஒருவன் நான்.

    மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசனார் அவர்களின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

    தமிழ்மனங்களில் நுழைந்த நீங்கள் தமிழ்மணத்திலும் நுழைய வாக்குடன்

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் கவித்துமான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. கடல் கடந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்களா?
    உங்கள் மனவலியினை என்னால் உணர முடிகிறது. வாழ்க்கைக்கான ஆதாரத்தையும் எதிர்கால வாழ்க்கைக்கான உத்திரவாதத்தையும் சம்பாதிக்கவே ஆயிரமாயிரம் பேர் கடல் கடந்து செல்கிறார்கள். ஆனால் இடையில் ஏற்படும் பலதரப்பட்ட பிரச்சினைகளினால் அவர்களில் நிறைய பேருக்கு கரை சேர முடிவதில்லை. மற்ற‌வர்களுக்கு உங்கள் பிரச்சினைகள் புரியவில்லையென்றால் கவலைப்படாதீர்கள். மனம் சோர்ந்து விடாமல் பிரச்சினைக்குரியவர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு வாழ்க்கையில் உற்சாகமாக முன்னேறிச் செல்லுங்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ அருமையான கருத்துரை தந்தமைக்கு நன்றி நான் நாட்டுக்கு போகும் முன் சார்ஜாவுக்கு வருகிறேன்

      நீக்கு
  17. ஒருமாதத்தில் திரும்ப வருவேன் என்று சொன்ன போதே ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது. குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க இருப்பது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. ஏற்கனவே பேசிவிட்டோம்தான் இல்லையா. அதனால் இங்கு கருத்து எதுவும் இல்லை. இங்கு வேண்டாம் என்பதாலும் தவிர்க்கப்படுகிறது. இதுவும் கடந்து போகும். நடப்பதெல்லாம் நன்மைக்கே.... என்று சொல்லிச் சமாதானம் அடைந்து கொள்வதுதானே பொதுவாகச் சொல்லப்படும் தத்துவம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நேரில் பேசி விட்டோம் உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. வணக்கம்
    வலி எனக்கும்தான் ...
    ஆனால் இனி வரும் நாட்களில் இந்த முடிவை எடுதத்தற்காக ஒரு வினாடி கூட வருத்தப்படக் கூடாது என்கிற தெளிவோடு இருங்கள்.

    இறைவன் உங்களுக்கு மன அமைதியையும் நம்பிக்கையும் தரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே அற்புதமாக சொன்னீர்கள் நிச்சயமாக வருமானம் போய் விட்டதே என்று வருந்த மாட்டேன் வந்து சந்திக்கிறேன் தோழரே...

      நீக்கு
  20. கவலையை விடுங்க அண்ணா....
    சுற்றத்தார் நம் கஷ்ட நஷ்டத்தை யோசிப்பதில்லை...
    நேரில் பேசுவோம்...
    உங்களது முயற்சிகள் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வெள்ளிக்கிழமை வருகிறேன் பேசுவோம்.

      நீக்கு
  21. உங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டீர்களா? முதலில் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் உங்கள் மன வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எப்போதும் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ விரைவில் வருவேன் இனிய இந்தியா

      நீக்கு
  22. தங்களை 23-09-2016 அன்று சந்தித்தது பற்றி பதிவிடலாமென இருந்தேன். ஆனால் பேசிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் பணி துறந்து தாயகம் திரும்புவதாக சொன்னதை நான் எழுதுவது சரியல்ல. அதை நீங்கள் சொல்வதே சரி என்பதால் பதிவிடாமல் விட்டுவிட்டேன்.
    எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.
    என்ற வள்ளுவரின் வாக்கினை நினைவில் கொள்ளுங்கள்.
    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. எனவே மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களுக்காவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் வாழுங்கள்.உங்களின் துணைவியார் வானின்று உங்கள் குடும்பத்தைக் காப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வள்ளுவனின் பொருந்தத்தக்க வாக்குகளை தந்தமைக்கு நன்றி தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  23. அன்பும் அமைதியும் மட்டுமே முக்கியம் உங்கள் முடிவால் நலம் பிறக்கட்டும் .

    பதிலளிநீக்கு
  24. உங்களுக்குப் பிடித்த முடிவு எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். தமிழகத்தில் விரைவில் சந்திப்போம்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி கண்டிப்பாக சந்திப்போம்

      நீக்கு
  25. துணைவியின் பிரிவு எத்தகு கொடியது என்பதை இப்பதிவை வாசிக்கும் போது உணர முடிகிறது. நானும் துபாயில் தான் வசித்து வருகிறேன், நண்பரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தங்களின் தொலைபேசி எண்ணை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் - arunv.blogger@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நணபரே சந்திக்கலாம் விரைவில் மின்னஞ்சல் காண்க.... வருகைக்கு நன்றி

      நீக்கு