தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

என் நினைவுக்கூண்டு (1)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


வனிதா...
உனது மரணம் என் மனதை இன்னும் உலுக்கி கொண்டு, உறுத்திக் கொண்டு இருக்கின்றதடா.... நீ எப்படி இந்த வயதில் இறந்திருக்க முடியும் ? அதுவும் சட்டென.... மரணம் ஆறிலிருந்து நூறுவரை என்பதை நான் அறிந்தவனே..., இருப்பினும் நீ விதி வந்து இறந்தாயா ? இல்லை எனது கவனக்குறைவால் இறந்தாயா ? உன்னை நானே தாரை வார்த்து கொடுத்து விட்டேனோ ? உன்னை எதற்கு கோயமுத்தூர் அழைத்து போனேன் ? கோயமுத்தூரில் அண்ணன் வீடு வாங்கி ஒன்பது வருடங்கள் கடந்தும் நீ இன்னும் அந்த வீட்டுக்கு வரவில்லையே... அதனால்தானே அழைத்து போனேன் அங்கு உன்னை காலன் அழைக்க வருவான் என்று நினைக்க வில்லையே... எனது கணக்கு பிழையாகி விட்டதே... சாப்பிடாமல் நீ ஒரு தினம்கூட இருந்ததில்லையே... கடைசி மூன்று தினங்கள் சாப்பிட மறுத்து கடைசி நாள் இரவு முழுவதும் இருமிக்கொண்டு துப்பினாயே... நான் முழு இரவும் உறங்கவில்லையே... துடைத்துக்கொண்டே உட்கார்ந்து இருந்தேனே... விடிந்தும் விட்டதே.... பிறகும்கூட வேறு வழியின்றி ஆம்புலன்ஸ் வரவழைத்து உன்னை வலுக்கட்டாயமாக அந்த தனியார் மருத்துவமனைக்கு செல்லும்போது வரமாட்டேன் என்று அலறி வினோதமாக சப்தம் கொடுத்தாயே... நாம் இறந்து விடுவோம் என்று அறிந்து விட்டாயாடா ?

மருத்துவர்கள் உன்னை பரிசோதித்ததும் உன்னை இன்று இரவுக்குள்....... என்றார்களே... நொறுங்கி விட்டேனடா.... அந்நொடி. உன்னைப்பற்றிய அனைத்து விபரமும் சொன்னேனே.... நீங்கள் நினைப்பது போல சராசரி பேஷண்ட் கிடையாது பிறந்தது முதல் இதுவரை ஊசி போட்டது கிடையாது வெறும் மாத்திரை மட்டும்தான் என்று மேலும் எங்கு போனாலும் நான் கூடவே இருந்தால்தான் உங்களால் எந்த சிகிச்சையும் கொடுக்க முடியும் காரணம் இவள் குழந்தை என் கையை பிடித்துக் கொண்டே இருந்தாயே.... ‘’போகாதண்ணே’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாயே... வாழ்வில் முதன்முறையாக உன்னைச்சுற்றி எத்தனை மிஷின்கள், உடம்பில் ஊசிகள், ஒயர்கள் பயம்தான் உன்னை கொன்று விட்டதோடா ? சூழ்நிலையை கண்ட அவர்கள் சொன்னார்கள் ஐ.சி.யூ வில் சேர்த்தால் பலன் உண்டு என்றார்களே... சம்மதித்தேன் அங்கு எல்லோரும் மாஸ்க் மாட்டி இருக்க நான் மட்டும் நீ காண வேண்டும் என்பதற்காக... மாஸ்க்கை கழட்டி விட்டே நின்றேனே... அதனால்தானே நீ சிரித்துக்கொண்டு இருந்தாய்... அங்கு சேர்த்தவுடன் மருத்துவர்கள் மீண்டும் சொன்னார்களே... கேஷுவாலிட்டியில் இரண்டு தினம் வைத்தால் பலன் உண்டு என்றார்களே... அங்கு நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் செலவு வரலாம் என்றார்களே... சம்மதித்தேன் அங்கு சென்ற சிறிது நேரத்தில் சொன்னார்களே... இல்லை ஜி.ஹெச். கொண்டு போங்கள் நாங்களே ஆம்புலன்ஸ் தருகிறோம் என்றபோது.... எனக்கு முழுமையாக விளங்கி விட்டதடா... இது ரமணா சினிமா என்று. இந்த மூன்றறை மணி நேரத்துக்குள் இவ்வளவு பணம் பறிக்க முடியுமா ? இதை இவர்கள் தொடக்கத்திலேயே சொல்லி இருக்கலாமே... மருத்துவர்கள் இறைவனுக்கு சமம் என்றார்களே... எவன் சொன்னது ? இவர்கள் மருத்துவம் செய்வதைவிட அழகாக மூளைச்சலவை செய்கின்றார்கள் இவர்கள் பணம் பறிப்பதற்காக தனது விதிமுறைகளை எனக்காக தளர்த்தினார்களே அதாவது நான் கூடவே நின்று உனது கைகளை பிடித்துக் கொள்வதற்காக...

வனிதா
நமது சந்ததிகளில் இனி யாரேனும் மருத்துவராக வேண்டாமடா... அது பாவச்செயலாகி விட்டதடா... எனது மகள் மருத்துவம் படிக்கிறேன் என்று சொன்னபோதுகூட தொடக்கம் முதலே அந்த ஆசைகளை அழித்தே வந்தேன் அன்றே சந்தேகம் இருந்தது இன்று உன்னை பறிகொடுத்ததும் உறுதியாகி விட்டது பிறகு யார் இந்த மக்களை காப்பாற்றுவது ? என்று கேட்காதே.... அதை யாரோ வந்து காப்பாற்றுவார்கள் என்று சொல்ல மாட்டேன் காரணம் இனி எங்கும் எவனும் எவரையும் காப்பாற்ற மாட்டான் காரணம் எவனுக்கும் இங்கு மனிதாபிமானம் கிடையாது அரசியல்வாதிகளில் எவனையாவது நல்லவன் என்று சொல்ல முடிகின்றதா ? இதேநிலைதான் இனி மருத்துவனுக்கும் முடிந்தவரை பணம் பறித்து பிணம் ஆக்கி கொடுப்பான் நாட்டை ஆளும் முதல்வருக்கே இந்நிலைதான் வனிதா நாம் எம்மாத்திரம். பதவியும், பணமும், அதிகாரமும் எதனையும் வெல்லும் முடிவில் அதுவே மனிதாபிமானத்தை கொல்லும்.

ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு ஜி.ஹெச் கொண்டு போங்கள் என்றார்கள் மருத்துவர்கள் என்ற எமகாதகர்கள் இரவு பதினொறு மணிக்கு தங்கை ஆம்புலன்ஸில் என்னைப்பார்த்து வழக்கமான சிரிப்பு ஜி.ஹெச். பற்றி நான் அறியாதவனா ? வேண்டாம் வீட்டுக்கு போவோம் தங்கை நம் வீட்டிலேயே நம் மடியிலேயே நம்மைக் கண்டபடியே.... நம் விழிகளின் வழியே மரணிக்கட்டும் சந்தோஷமாய் அனுப்பி வைப்போம் வேண்டாம் ஜி.ஹெச். என்ற மரணமடம் ஆனால் சிலிண்டரும், ஒயரின் இணைப்பும் உன்னுடனே என்ன செய்வது  ?

கூண்டுகள் சுழலும்...

28 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி !

    நெஞ்சம் கனக்கும் நினைவுகள்
    என்னையும் ஒருகணம்
    அழவைத்தது இழந்து போன
    என் தங்கையையும் நினைத்து !

    காலத்தின் தண்டனைகளுக்கு நாம்
    காரணம் அல்ல மனதினைத் தேற்றிக் கொள்ளுங்கள்
    எம் முடிவு எப்போதோ யார் கண்டது !

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா4/09/2017 4:10 AM

    மிக சோகமாக உள்ளது...சகோதரா..
    .thamil manam- 1

    பதிலளிநீக்கு
  3. நினைக்க வேண்டாம் என்று சொல்ல முடியாதுதான். ஆனாலும் கொஞ்சம் ஆறுதல் கொள்ளுங்கள் கில்லர்ஜி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் துயரில் பங்கு கொள்கின்றேன் நண்பரே
    ஈடு செய்ய இயலா இழப்பு
    மருத்துவம் என்பது வணிகமயமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
    நாம் இதயத்திற்கு மருத்துவம் பார்க்கச் சென்றால்,
    அவர்கள் தங்களுடைய இதயத்தை ஒதுக்கி வைத்துவிட்டே
    மருத்துவம் பார்க்கிறார்கள்,
    மருத்துவர்கள் இதயம் மட்டும்
    பணம், பணம், பணம் என்றே துடித்துக் கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. பல தனியார் மருத்துவமனைகள் பணம் பிடுங்கும் நிறுவனங்களாகத் தான் இருக்கிறது. அரசாங்கமும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது என்பது தான் இன்னும் அதிக சோகமான விஷயம்..... :(

    பதிலளிநீக்கு
  6. மீள்க
    இழப்புகளின் வலிகளைதாங்க காலம் உங்கள் இருதயத்தை பக்குவப்படுத்தட்டும்

    பதிலளிநீக்கு
  7. கடவுளே....எனது கண்ணிலும் நீர் வழிகிறது..


    என்ன சொல்ல இந்த மனிதம் அற்ற மனிதர்களை பற்றி....

    பதிலளிநீக்கு
  8. வருத்தம்தான். எழுதி எழுதி ஆறுதல் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஒன்றும் சொல்வதற்கில்லை.. மனம் அதிர்கின்றது..

    பதிலளிநீக்கு
  10. மனம் வலிக்கிறது அண்ணா...
    மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டிய தொழிலை பணமே பிரதானமாக்கிவிட்டார்களே... வேதனை.

    பதிலளிநீக்கு
  11. நெஞ்சுருக்கும் அவலம்.

    தொடர்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
  12. 1991 லிருந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் தொடங்கியதிலிருந்து...சேவை தொழில் செய்வோர் எல்லாம் வசூல் ராஜாக்களாக ஆகிவிட்டார்கள் நண்பரே..............

    பதிலளிநீக்கு
  13. சில நினைவுகள் கூடவே வந்து துரத்தும் மனோதைரியம் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  14. வேதனைதான் கில்லர்ஜி! எங்கள் ஊரில் இன்னும் இந்த அளவிற்கு மருத்துவம் புனிதம் இழக்கவில்லை...நல்ல மருத்துவமனைகள் இருக்கின்றன...

    கீதா: நீங்கள் அன்று, நான் எந்த மருத்துவமனை என்று கேட்டதும் நீங்கள் சொன்னதுமே ஐயோ ஏன் இந்த மருத்துவமனை என்றே எனக்குத் தோன்றியது..ஏனென்றால் நீங்கள் ஃபேமஸ் தனியார் மருத்துவமனை என்றதுமே எனக்குத் தோன்றியது அந்த மருத்துவமனைதான்...எல்லா மருத்துவமனைகளுமே இப்போது அப்படித்தான் என்றாலும் இந்த மருத்துவமனை பெயர் பெற்றது....என் நெருங்கிய உறவினர் மருந்துத் துறைதானே அதனால் தெரிந்தது....

    கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளுமே மலை முழுங்கிகள்...கார்பரேட் என்று சொல்லிக் கொண்டு....மருத்துவத் தொழிலே புனிதம் இழந்து விட்டது...

    ஆனால் உங்கள் மகள் படிக்க ஆசைபப்டும் போது ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள். நம்மைப் போன்றவர்கள் தானே நம் குழந்தைகளை இந்தச் சமூகத்திற்காகச் செய்யச் சொல்ல முடியும்....ஊக்குவிக்க முடியும். சேவை செய்ய தூண்ட முடியும். நல்ல விஷயங்களைப் போதிக்க முடியும்...அப்போதுதான் மருத்துவம் மீண்டும் புனிதமாக முடியும்/....உங்கள் மகளைப் படிக்க வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது ஜி...

    வேதனைதான் இக்குழந்தைகளை எல்லாம் ட்ரீட் செய்ய வேண்டுமென்றால் அந்த மருத்த்வர்களுக்கு இவர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்...ம்ம்ம் என்ன சொல்ல...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. மனம் வலிக்கிறது... பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் திகதி குறிக்கப்பட்டு விடுகிறது, அதனால் நம்மால் எதுவும் பண்ண முடியாது என்கிறார்கள்... என்ன செய்வது...

    பதிலளிநீக்கு
  16. அந்த பரபரப்பான நிமிடங்கள் தந்த, திகிலான உணர்வுகளை இன்று நினைத்தாலும் மனம் நடுங்கும் அனுபவம் எனக்கும் உண்டு. மீண்டு வாருங்கள் நண்பரே. --- தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  17. என்ன செய்ய முடியும்? ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை! :( காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும்!

    பதிலளிநீக்கு
  18. மனம் வலியில் ஆற்ற முடியாத துயரம்...

    பதிலளிநீக்கு
  19. மனம் கனக்க வைத்த பதிவு. ஆறுதல் அடைய முயற்ச்சி செய்யுங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  20. படிக்க மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  21. கனத்த மனதுடன் கண்ணீர் அஞ்சலி...

    பதிலளிநீக்கு
  22. உருக்கமாக இருக்கிறது நண்பரே! அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்! மருத்துவர்கள - குறிப்பாக- சொந்தமாக ஆஸ்பத்திரி வைத்திருக்கும் மருத்துவர்கள் - நமது நம்பிக்கைக்கு உரியவர்களா என்பது கேள்விக்குறி. மிகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

    - இராய செல்லப்பா (இப்போது) நியூ ஆர்லியன்ஸ்

    பதிலளிநீக்கு
  23. உள்ளம்
    எப்போதும் அமைதியாகாது
    உண்மையைப் போல
    பலமான எண்ணங்கள்
    அடிக்கடி நினைவில் வரும்!
    பிரிவு ஒரு போதும்
    உள்ளத்தை விட்டு ஓடாதே!
    அதுவும்
    அடிக்கடி நினைவில் வரும்!
    எதனை எண்ணுகிறாயோ - நீ
    அதுவாகவே ஆகின்றாய்!
    உள்ளத்தில் அமைதியைப் பேணு!
    தன்னம்பிக்கையுடன்
    தலையை நிமிர்த்தி நடைபோடு!
    தங்கள் பிரிவுத் துயரில்
    வலை உறவுகளுடன் நானும்!

    பதிலளிநீக்கு
  24. ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வலைத் தளத்திற்கு வருகை தந்தேன். ஏன் வந்தேன் என்று தோன்றுகிறது.

    உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. வனிதாவின் ஆன்மா சாந்தியடையவும், இந்த துக்கத்தை தாங்கும் சக்தியையும் அளிக்க இறைவனை மனமார இறைஞ்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. சிரிக்க வைக்கும் உங்கள் எழுத்து இப்போது அழ வைத்துக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு வார்த்தையும் சோகத்தை பிழிகின்றன
    பிறப்பு இல்லாமலே
    நாளொன்று இல்லை

    //இறப்பு இல்லாமலும்
    நாளொன்று இல்லை

    நேசத்தினால் வரும்
    நினைவுகள் தொல்லை

    மறதியைப் போல்
    ஒரு மாமருந்தில்லை//
    என்ற வைரமுத்துவின் நினைவிற்கொண்டு அமைதி அடைவீர்.

    பதிலளிநீக்கு