தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

ஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு...


நாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்தங்களோ, மனஸ்தாபம் வந்தால் ஒதுங்கி விடலாம் ஆனால் சாஸ்திரம் பார்த்து சொந்த பந்தங்கள் கூடி நின்று வாழ்த்தி ஊர் அறிய திருமணம் செய்த கணவனோ, அல்லது மனைவியோ விருப்பமில்லை என்றால் ஒதுங்கி விடமுடியுமா ? கடைசிவரை இருவரும் வாழ்க்கையை இழுத்துக் கொண்டுதானே போக வேண்டியதிருக்கின்றது இந்த சமூகத்தில் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு வாழும் நண்பர்கள் எத்தனையோ ?
நண்பிகள் எத்தனையோ ?
இது சரியா ?
தவறா ?
இதற்கு தீர்வு இருக்கிறதா ?
இருக்கிறது ஆம் இருக்கிறது.
இதனைக் குறித்து பேசுவது யார் ?
அலசி ஆராய்வது யார் ?
முடிவில் தீர்ப்பு சொல்வது யார் ?
எல்லாமே இரண்டே பேர்தான்.
ஆம் எல்லாமே இரண்டே பேர்தான்.
யாரந்த இரண்டு பேர் ?
கணவனும், மனைவியும் மட்டுமே...
இதற்கு இரண்டு பேருமே நியாயமான நியாயம் பேசும் அறிவாளிகளாக இருத்தல் அவசியம் Ego என்னும் அரக்கனை மனதிலிருந்து வெளியேற்றிய பிறகே இதனைக் குறித்து பேசமுடியும் விட்டுக் கொடுத்தலில் இருவருமே நீயா ? நானா ? என்று போட்டி போடவேண்டும்.

கணவன் மனைவிக்குள் ஆயிரம் விடயங்கள் இருக்கும் முதலில் இருவருமே உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தல் அவசியம் தன்னை குற்றப்படுத்தி விட்டாளே... என்றோ, விட்டானே... என்றோ நினைத்தல் கூடாது பேசும் விடயங்கள் ஆணித்தரமாக, ஆக்கபூர்வமாக, நியாயமாக, அதையும் இதமாக, கனிவாக, பணிவாக பேசுதல் வேண்டும், அதைவிட முக்கியம் இருவருமே மீண்டும் இணைந்தே வாழப்போகிறோம் என்ற சிந்தனையே மேலோங்கி இருக்க வேண்டும் தவறு தன்மீதெனில் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை தவறு என்மீதுதான் மறப்போம் என்றாலே போதுமானது மன்னிப்பு கேட்குதலும் கூடுதல் மகிழ்ச்சியைத்தரும் அதேநேரம் மன்னிப்பு கேட்டவரை இகழ்ச்சியாக பார்த்தலும் கூடாது அதுவே மீண்டுமொரு பிரச்சனைக்கு ஆரம்பமாகி விடக்கூடும் 

பேசும்போது இருவரும் கண்களை நேருக்குநேர் பார்த்து பேசுதல் மிகவும் முக்கியம் சுவற்றைப்பார்த்து பேசுதல் கூடாது நீங்கள் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பதில் தயக்கம் ஏன் ? எத்தனை முறைகள் இந்தக்கண்கள் சந்தித்து காதல் மொழிகள் பேசி இருக்கின்றன... மேலும் பேசும் பொழுது பேச்சில் சிறிய இடைவெளி அவசியம் அவை புரிதலை அதிகப்படுத்தும் பேசும் பொழுது எதிரெதிர் உட்காரக் கூடாது அருகருகே இருத்தல் மிகமிக அவசியம் பேசும் பொழுது தொட்டு பேசுதல் ஏற்படும் தருணத்தில் தொட்டுப் பேசவேண்டும் அந்தத் தொடுதலும் கையைப்பற்றிக் கொண்டு பேசும் வார்த்தைகளாக இருந்தால் மிகவும் சிறப்பாகும் இதை சண்டை சச்சரவு இல்லாத தம்பதியினரும்கூட செயல் படுத்திப்பாருங்கள் உண்மை விளங்கும்.

தொடுதல் அன்பை வெளிப்படுத்தும் இதன் காரணமாகவே எதிரெதிர் உட்காருதல் கூடாது என்றேன் வேறு காரணமல்ல... அரபு நாடுகளில் சமாதானம் ஆனவுடன் கை கொடுத்துக் கொள்வதுகூட இதனால்தான் இருக்கும் என்பதும் எமது தனிப்பட்ட கருத்து ஒரு தமிழ்த் திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று நகைச்சுவையாக காண்பிப்பார்கள் உண்மையில் இது ஒரு நல்ல விடயமே கோபத்தைக் குறைத்து பகைவனையும் நண்பனாக்கி விடும்

இந்த இருவரின்றி பேச்சு வார்த்தைக்கு மூன்றாம் நபரொருவர் வரும் பொழுது இருவருமே அவரிடம் தனது தன்மானத்தை உயர்த்துவதிலேயே குறியாகி பிறரை குற்றவாளியாக்கியே தீரவேண்டும் என்ற சிந்தை மட்டுமே இருக்குமேயின்றி வேறில்லை அதிலும் மனைவி கௌரவக் குறைச்சலாக மூன்றாம் நபரின் முன் ஒரு வார்த்தை சொல்லும் பொழுது இயல்பான ஆணின் குணம் அந்த இடத்தில் கோபத்தையே வெளிப்படுத்தும், அதில் மனைவியும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதவர் என்றால் ? பிரச்சனைகள் மேலும் வளருமே தவிர குறைவது சாத்தியமில்லை மேலும் நாட்டு ஆமையாக நுழைந்த மூன்றாம் மனிதர் நல்லெண்ணம் இல்லாதவராயின் மேலும் எதையாவது பற்றவைத்து மூட்டி விட்டு விடுவார்

 காரணம் இன்று நாட்டில் இந்த மாதிரியான சகடைகள் நிறைய திரிகின்றது மூன்றாம் நபர் மனைவியின் சகோதரர் ஆனாலும்கூட சாத்தியங்கள் குறைவே காரணம் வந்தவர் தனது சகோதரியை எப்படியாவது வாழவைத்து விடவேண்டும் என்றுதான் பேசுவார் ஆனால் கணவன் மைத்துனரிடம் தனது வெட்டி பந்தா காட்டுவார், சகோதரி தனது சகோதரனிடம் தனது குடும்பத்து வறட்டுக் கௌரவத்தை நிலை நாட்டி பேசுவார் இதுவே பிரச்சனைகளை மேலும் வளர்த்து விடும் ஆகவே மனம் விட்டு பேசுங்கள் உங்கள் மனக்குறைகளை பேசுங்கள் பேசி மட்டுமே தீர்க்கமுடியும் வாழ்க்கை வாழ்வதற்கே...

கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் இரவில் கூடிக்கொள்வார்கள் என்ற பழஞ்சொல் உண்டு இது என்னைப் பொருத்தவரை தவறு என்பேன். இரவுக்கு முன்பே பேசிக்கொள்ளுதல் வேண்டும் இதுவே உண்மையான அன்பு இரவில் கூடினால் அது உடலுக்காக, இரவுக்கு முன்பே பேசினால் அது உணர்வுக்காக, உண்மையான அன்புக்காக.. இருவருக்கும் சண்டை வந்து சமாதானமான பிறகு சேர்ந்து கொண்டால் இதில் வெற்றியாளர் யார் தெரியுமா ? நடந்ததை மறப்போம் என்று முதலில் சொல்பவர் யாரோ அவரே வெற்றி பெற்றவர் அவள்தானே வலியக்க வந்து பேசினாள் ஆகவே நாம்தான் வெற்றி பெற்றோம் என்று கணவனோ, அவர்தானே வலியக்க வந்து பேசினார் ஆகவே நாம்தான் வெற்றி பெற்றோம் என்று மனைவியோ நினைத்தால் ? அவர்கள் இருவருமே அறிவீணர்களே... விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர். 

கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கடைசிவரை வரும் உறவு அதாவது மரணம்வரை இதுதானே நமது தமிழ்க் கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது பெற்ற மக்கள் இடையில் வந்தவர்கள் இடையிலேயே போய் விடலாம் ? ? ? இனிவரும் காலங்களில் இதுவே எழுதப்படாத விதி விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை மனைவியிடம் கணவனும், கணவனிடம் மனைவியும் விட்டுக் கொடுத்தால்தான் என்ன ? அவர்கள் உணர்வின், உடலின், உயிரின் பாதியல்லவா !
மனம் விட்டு மணம் பெறுங்கள் வாழ்க வளமுடன்.

நட்பூக்களே இதெல்லாம் உமக்கு எப்படித் தெரியும் ? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் இதோ எமது பதில்...

இதை எல்லாம் சொல்லித்தர அன்று எனக்கு யாருமே இல்லை நான் இந்த உலகப் பிறவிப்பயனில் 99 சதவீதம் இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டு இருந்தவன், இருப்பவன் நான் வாழ்ந்தது மிக மிக மிக மிக குறைவு இந்த உண்மை அறிந்தவர் மூவர் மட்டுமே முதலாமாவர் நான், இரண்டாமாவர் மறைந்து விட்ட என்னவள், மூன்றாமாவர் என்னையும், என்னவளையும் படைத்து, இணைத்து, பிரித்து விட்ட இந்த உலக மேலாளன். அந்த இழப்பின் ஏக்கம், விரக்தி எனது எதிரிக்குகூட வேண்டாம் என்று இவ் உலக மேலாளரிடம் வேண்டிக் கொள்கிறேன் எனது இந்த வயதுக்குள் பிரிந்திருந்த நான்கு தம்பதிகளை நான் சேர்த்து வைத்து இருக்கின்றேன்.

அவர்களில் மூன்று தம்பதிகள் இன்றுவரை நலமுடன் வாழ்கிறார்கள் இத்தனையும் நான் அபுதாபியில் வாழ்ந்து கொண்டு இருந்தபோது இனி எனது மரணகாலம் வரை... எனது வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனது அனுபவத்தின் காரணமாய் இந்த எண்ணங்களை பகிர்ந்தேன் இதைப்படித்து இந்த உலகமே கடைப்பிடிக்க வேண்டுமென்று நான் நினைத்தால் அது எனது அறியாமை இதைப்படித்து ஏதாவதொரு பிரிந்த கணவன் மனைவி சேர்ந்தால் எனக்கு ஆத்ம திருப்தி நாளை எனது ஆத்மாவுக்கும் திருப்தி கிடைக்கும் என்று ஆத்மார்த்தமாய் நம்புகிறேன்.

நல்லதை நினை நன்மை நடக்கும்
தொண்டு செய் மேலான நிலை அடைவாய்.
-சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள் குடமுருட்டி.

51 கருத்துகள்:

  1. இக்காலத்திற்கான அவசியமான பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கையைப் பற்றிக் கொண்டு பேசவேண்டும் என்று சொல்லியிருப்பது சிறப்பு. உண்மைதான். இந்தத் தொடுதல்கள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். மூன்றாம் நபர் தேவையில்லை, , இந்த இருவரும் தன் கட்சியை உயர்திச் சொல்லவே விரும்புவார்கள் என்பது நூறு சதவிகிதம் உண்மை.

    அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம் ஜி உணர்வுப் பூர்வமாய் படித்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. பயனுள்ள பதிவு.. சிந்திக்கத்தூண்டும் விடயம் நன்றாகவிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. எக்காலத்தும் பயனுள்ள பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  5. நிறைவான பதிவு... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  6. முழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன். அதோடு முக்கியமாய் இரண்டு தரப்புப் பெற்றோர்களும் முக்கியமாய்ப் பெண்ணின் பெற்றோர் இதில் தலையிடவே கூடாது! பாதிக் கலகம் அவர்களால் தான் ஏற்படும். பெண்ணை ஆதரிக்கிறேன் பேர்வழினு தூண்டி விடுவாங்க! பல குடும்பங்களில் இப்படித் தான் பிரச்னை பெரிதாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மை எனது மனைவியின் பெற்றோரால்தான் எங்கள் வாழ்வு பிரிவிலேயே கடந்து விட்டது.

      நீக்கு
  7. // இரண்டாமாவர் மறைந்து விட்ட என்னவள் // ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 17 வருடங்களுக்கு முன் இறந்து விட்ட என் மனைவி.

      நீக்கு
  8. மிகவும் சிறப்பாக எழுதி இருக்கீங்க கில்லர்ஜி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. பெண் + சண் = பெண்சண்/ பென்சன்
    இரண்டைச் சொல்கிறது
    1-பென்சன் வேலையில சேர்ந்திரு!
    2-பிள்ளைகள் பெற்றோரை நினைக்காமை!

    அருமையான கருப்பொருளைப் பதிவாக்கி, உறவுகளைப் பேண வழிகாட்டி உள்ளீர்கள்.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அருமையான சிந்தனைகளுடன் பதிவை எழுதியிருக்கிறீர்கள். கணவன் மனைவி உறவு புனிதமானது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும். தங்கள் கருத்துக்கள் உண்மையானவை. அருமையான எழுத்துக்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் பாராட்டுகள் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  11. கணவன் மனைவியில் யார் பெரியவர் என்னும் எண்ணம் கூடவே கூடாதுஅதுவே ஈகோ வுக்கு இடம் கொடுக்கும் திருமண பந்தத்தில் இருவரும் சமமே ஒருவருக்குத் தெர்ர்யாததை மற்றவர் மூலம் தெரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால்நம் சமுதாயத்தில் முற்றிலும் மாறி ஏனோ கணவனே பெரியவன் என்னும் ஆணாதிக்க எண்ணமே நிலவுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா இது ஆணாதிக்கமே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. விழிப்புணர்வு பதிவுன்னு சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு.
    அனுபவ பதிவு.

    நீங்கள் சொன்னது ஒவ்வொன்றும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை.

    குடும்பம் என்றால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சகிப்பு தன்மை, தியாகத்துடன் வாழும் ஒரு ஆலயம்.

    கொஞ்ச காலமாய் உங்களுக்காக வாழுங்கள், உங்களுக்கு என்று வாழ்க்கை இருக்கு என்று எல்லாம் தவறாக வழி நடத்த படுகிறார்கள்.

    விட்டுக் கொடுப்பவர் கெட்டு போவதில்லை என்று சொல்லாமல், எத்தனைகாலத்திற்கு இப்படி விட்டுக் கொடுத்து போவாய்? என்று இரு பாலர்களையும் கெடுக்கிறார்கள்.

    அறிவுரை சொல்லும் பெற்றோர்களையும் உங்கள் காலம் வேறு எங்கள் காலம் வேறு சகிப்பு தன்மைகள் ஆளுக்கு ஆளுக்கு மாறுபடும். தியாகம் செய்யவும், விட்டுக் கொடுக்கவும் அளவு உண்டு என்று சொல்லும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    பெற்றோர்கள் ஒன்றும் செய்யாமுடியாமல் இருக்கும் நிலையும் உருவாகி கொண்டு இருக்கிறது.

    இறைவன் தான் இப்படி வழி நடத்துகிறான் விதிபடி நடக்கட்டும் என்று விட வேண்டியதாக உள்ளது.

    பிரிந்த குடும்பங்களை சேர்த்து வைப்பது மிகவும் புண்ணியமான காரியம் தொடர்ந்து செய்து வாருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவாக அலசி கருத்திட்டமைக்கு நன்றி

      நீக்கு
  14. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  15. சீரிய சிந்தனை. சிறப்பான தொண்டு. தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. நல்லா எழுதியிருக்கீங்க கில்லர்ஜி. கணவன் மனைவி உறவு என்பது சிறப்பானது. அதற்கிடையில் யாருக்கும் வேலை கிடையாது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவர். பிரச்சனைகள் இருந்தால் பேசித்தீர்த்துவிடலாம். இல்லையெனில், குழந்தைகள் நன்மைக்காக பொறுமையோடு இருக்கலாம். மூன்றாமவர் (அவர் யாராக இருந்தாலும், பெற்ற தந்தையாக இருந்தாலும்) தலையீட்டுக்கு அங்கு வேலையில்லை.

    உங்கள் இடுகையில் 'கூடிக்கொள்வது' என்பதற்கு நீங்கள் எழுதிய அர்த்தம் இல்லை. தண்ணீர் பிரிந்து மீண்டும் சேர்ந்துவிடுவது என்ற அர்த்தம்தான். பிரிந்ததும் தெரியாது சேர்ந்ததும் தெரியாது. மூன்றாமவர் தலையிட்டால் அது, கண்ணாடி டம்ளரை உடைத்து ஒன்று சேர்ப்பதுபோல. அது என்றும் ஒன்றுசேர இயலாது.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டையார் அவர்களுக்கு மனம் நிறைந்த
      நன்றி. திருமண முதல் வருடங்கள் ஓடிவிடும்.
      பிறகு வரும் சங்கடங்கள்,அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

      மற்றவருக்கு இவர்களின் உள்ளம், முன்னே பின்னே நடந்தது தெரியாது.

      அதுவும் பெற்றோர்கள் ஒரு பக்கமாக அறிவுரை சொல்வது
      மிகத்தப்பாக முடியும்.
      இந்த அன்பும் புரிதலும் ஏன் தம்பதிகளுக்கு விட்டுப் போகிறது.

      ஏன் ஈகோ பிரச்சினை வருகிறது.
      உங்கள் தற்போதைய முயற்சிகள் இன்னும் நல்ல வெற்றி
      பெறட்டும். தாங்களும் மன நிம்மதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு...

      தங்களது விரிவான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
    3. வல்லிம்மா அவர்களின் அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
    4. நானும் இதில் நெல்லைத்தமிழனை வழிமொழிகிறேன்... அதாவது மூன்றாமவர் தலையிடும் அளவுக்குப் பிரச்சனை எழும்பி பின்பு சேர்வதென்பது என்னமோ ஒப்புக்காக.. குழந்தைகளுக்காக எனத்தான் இருக்கும்.. தமக்கான வாழக்கை அங்கிருக்காது..

      நீக்கு
  17. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)) ஹையோ பழக்க தோசத்தில சொல்லிட்டேன்:) மன்னிச்சுக்கோங்ங்ங்:) இருப்பினும் கீழிருந்து மேல பார்த்தால் மீதானே 1ஸ்ட்டூஊ...

    அருமையாக அலசிச்சொல்லியிருக்கிறீங்க... ஆனா சில விசயங்களில் ஓவரான பிரச்சனை மனம் ஒத்துப் போகவில்லை எனில்.. அடம் பிடிச்ச்சு சேர்த்து வைத்தல் பாவமே எனத்தான் நான் நினைப்பேன்.. எதுவாயினும் மனம் ஒத்துப்போய் நடக்கோணும்.. ஊருக்காக ஒப்புக்காக வாழ்க்கையை வாழ நினைக்கக்கூடாது என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்க திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். லட்சத்தில் ஒருத்தருக்கு அது சரியாக அமையாமல் போய்விடும் (என்னுடன் வேலை பார்த்தவன் - கேரள ரோமன் கேதலிக்.. திருமணம் முடிந்து மனைவியோடு இங்கு வாழ்ந்தான். மனைவி ஒரு நாள் மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டாள். உண்மையாக அவள் டிப்ரஷனுக்கு மருந்து சாப்பிடுபவள். திருமணம் ஆனதிலிருந்து தெரியாமல் மருந்து சாப்பிடுவது தடை பட்டிருக்கிறது. இந்த ஊரில் உடனே அவனை ஜெயிலில் வைத்துவிட்டார்கள். பிறகு இரண்டு நாள் கழித்து அவள் பிழைத்து எழுந்ததும்-இடுப்பு எலும்புகள் காலி- அவளே இவன் காரணம் இல்லை என்று சொன்னதும் விடுவித்தார்கள். பிறகு மிகுந்த கஷ்டப்பட்டு டைவர்ஸ் வாங்கினான் - சர்ச்சுக்கு உரிய ஆவணங்கள் காண்பித்து). இரு செடிகள் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும், அதனைக் கடந்துபோகத் தெரியணும். சொந்த அண்ணன் தம்பிகளுக்கே ஒத்துப்போவதில்லை.

      நீக்கு
    2. அதிரா அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    3. நெ.த. அவர்களின் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. நல்ல கருத்துகள் கொண்ட பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  20. பதிவை படித்தவுடன் வேறு ஒன்றும் தோனவில்லை. மனம் கனத்தது.

    " அன்புடை நெஞ்சம்"....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே

      நீக்கு
  21. நேருக்கு நேர் கண்ணைப் பார்த்து பேசவேண்டும் என்ற அருமையான கருத்தை ஆமோதிக்கிறேன். ஒருவர் பொறை இருவர் நட்பு என சொல்வார்கள். இது கணவன் மனைவிக்கும் பொருந்தும். யார் விட்டுக்கொடுப்பது என யோசிக்காமால் கணவனே விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். அருமையான் பதிவு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  22. எமக்கு பெண்ணும“,சன்னும், பென்சன்னும் இந்த மூன்று பாக்கியமும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாக்கி இல்லாமல் வாழ்வதே பாக்கியம்தான் நண்பரே

      நீக்கு
  23. அருமையான பதிவு. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க கில்லர்ஜி. கணவன் மனைவி உறவு என்பது யாரும் அதில் நுழையக் கூடாது பஞ்சாயத்து பண்ணுகிறேன் பேர்வழி என்று....அவர்களே தீர்த்துக் கொண்டால்தான் நல்லது.
    இருவரின் கருத்தும்

    கீதா: ஆமாம் ஜி கட்டிப்புடி வைத்தியம் நிஜமாவே ரொம்பவே நிறைய சொல்யூஷன்ஸ் கொடுக்கும். ஆனால் நிறையப்பேர் அதைத் தவறா பார்க்கறாங்க….

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு