வீடில்லா எனக்கு
நிழல் கொடுத்த
பதாகையின் கீழே
பசியின் தாக்கத்தால்
மறைவில் உறங்கி
கிடந்தேன் திடீரென
வந்த கூட்டம்
எழுந்து போ என
விரட்ட மிரண்டு போய்
பசியுடன் பார்த்தேன்
மேலே ஏறிய வீரர்கள்
இருவர் கொட்டினர்
தலைவனின் தலையில்
பாலை சாலையில்
ஓடிய பாலாற்றை கைகளில்
ஏந்தி பருக ஓடினேன் அருகே
காணொளி எடுக்கும்
அழகியல் கெடுமென
ஓங்கி மிதித்து
விரட்டினர் என்னை
பாவியர்கள் கூட்டம்
கண்ணெதிரே
பாலை பாழாக்கி
வார்த்தார்கள் பூமியிலே
அதில் எனக்கும் கூட
வாயில் வார்க்கலாமே பாலை.
எல்லாம் முடிந்து
களைந்து போனது கூட்டம்
ஓடிய பாலாறு கூடியதோ
நான் கிடக்கும் மறைவினிலே
கண்ணில் கண்ட
பாலும் மண்ணில்
நுழைந்து செல்ல
பசியின் கடுமை
என்னைக் கொல்ல
இந்த கொடுமையை
நான் எங்கு சொல்ல
இறைவா ! நீயும் உண்டோ ?
இல்லை வெண்பொங்கல்
உண்டு களித்த
நீ இப்பொழுதும்
உறங்கி கொண்டோ ?
நான் உறங்குமிடத்தை
ஈரமாக்கினர் நெஞ்சில்
ஈரமில்லா ஈனப்பிறவிகள்
வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்றாரே...
இந்தப் பதாகை
இருப்பதும் தமிழகம்தானே
ஒரு வேளை நான் தமிழன்
என்பதால்தான் என்னை
வாழ விடவில்லையோ
நான் வேற்று மொழி
பயின்று மீண்டும் தமிழகம்
வருவேன் உன்னுடன்
டமில் பேசி வாழ்வேன்
அப்பொழுது நீ
எனக்கும் வைப்பாயடா
பதாகைகள் என் வாயில்
ஊற்ற மறுத்த பாலை
எனது பதாகைகளுக்கு
ஊற்றுவாய்
நீதான்டா டமிலன்.


